Saturday, April 18, 2015

கவிதை

ஏதேதோ வார்த்தைகளை உச்சரித்து
என்னை உன் வாசலிலிருந்து விரட்ட முற்படுகிறாய்
மெல்லிய புன்னகை,
மிதமிஞ்சிய உற்சாகம் அல்லது
வெறித்த பார்வைகளை வீசியும்
என்னை விரட்டிவிடத் துணிகிறாய்
நீ அறிந்தும் அறியாத ஏதாவது ஒரு தருணத்தில்
உன்னை அழைத்துச் செல்ல வருவேன் –

உனக்கு விருப்பமில்லை என்றாலும் கூட...

கவிதை

நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் எலும்பிலிருந்து
கசிகிறது உயிர்ச்சாறு
புறங்கையில் துளிகளாய்ச் சிந்துகிறது
வெக்கை மனசு
தீச்சொல் தீண்டிய ஜ்வாலையில்
பொருள் சுவை இழக்கிறது
எப்பொழுதும் கோடையாக இருக்கும்
அகவெளியில்

வெறுப்பு மட்டும் எவ்வாறு பூத்தது?

கவிதை

பசுமாடு மேய்க்கும் பெரியம்மாவுக்கு
பசுவின் சுபாவம் தெரியும்.
பெரியம்மாவின் சுபாவம் பசுமாட்டுக்குத் தெரியும்.
பசுவின் குரலொலியில் அதன் தேவைகளைப்
புரிந்து கொள்கிறாள் பெரியம்மா.
பசுவின் முகத்தைக் கையில் ஏந்தி
மார்போடு அணைக்கும் பொழுது
பெரியம்மாவின் உடல் சூட்டிலிருந்து
அவள் ஆசைகளையும் ஏக்கங்களையும்
அறிந்து கொள்கிறது பசுமாடு.
முகத்தில் அவளைத் தாங்கி
அவள் அணைப்பில் சற்று நேரம் கிறங்கி நிற்கிறது
அசையாமல்.
அசைவற்ற அந்த கணம்
அன்பு முகிழ்த்து பிரவகிக்க
இருவர் உடல்களும் சிலிர்க்கின்றன.
பிள்ளைகளைப் பிரிந்த புத்திர சோகத்தை
இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.
உயிரினப் பேதமற்ற உறவுகளுக்கு

அறிவின் அளவுகோல் எப்படிப் பொருந்தும்?

கவிதை எனும் சொல்லாடல்

கவிதை எனும் சொல்லாடல்
மோகன ரவிச்சந்திரன்

இலக்கியப் பிரதிகளில் சிக்கலான அமைப்பைக் கொண்டது கவிதை. அது உட்பொதிந்த பாணியிலான உடலமைப்பைப் பெற்றது. மற்ற இலக்கியச் சொல்லாடகளிலிருந்து சற்றே வித்தியாசமானது கவிதையின் சொல்லாடல். அது பாத்திரப் பண்புகளைப் பிரதிபலிக்கக்கூடியது. பலவிதமான வள ஆதாரங்களிலிருந்து துவங்கி, பிரக்ஞை வழியாக மனப்பகுப்பாய்வினுள் நுழைந்து, பின் கவிதை எனும் இறுதி நிலையை அடைகிறது.

சொல்லாடலுக்குப் பொருத்தமான பொருள், பேசப்படும் உள்ளீட்டையும் சொற்களையும் அமைப்புரீதியாகக் கட்டமைக்கும் எண்ணம், மனப்பாங்கு, இயக்கம், நம்பிக்கை மற்றும் நடைமுறைகளின் ஒன்றிணைக்கப்பட்ட சிந்தனை அமைப்புமுறை என ஃபூக்கோ கூறுகிறார்.
கவிதையின் சொல்லாடலை நுட்பமாக அவதானிக்கும் பொழுது, கட்டமைப்பு போன்ற பிரதித்துவ மொழியியல் வரையறைகளாலும் கவித்துவச் சாதனங்களான அரூப மொழிக் கூறுகளாலும் பின்னப்பட்டிருப்பதைக் காணலாம்.

செறிவுமிக்க கட்டமைப்பு, தர்க்கம், இலக்கு, பொருத்தம், வெளிப்பாட்டுத் தன்மை, நிலைப்பாடு மற்றும் உட்பிரதியியல் போன்றவை பிரதித்துவ மொழியியல் வரையறைகளாக உள்ளன.

படிமம், உருமாற்றம், குறியீடு, சப்த ஒழுங்கு, சித்திரம், ஓசை லயம், எதிரொலி, முரணுரை, மறைமுகக் குறிப்பு மற்றும் குரல் போன்றவை கவித்துவச் சாதனங்களாக இருக்கின்றன. இவை உட்பொதிந்த வெளிப்பாட்டினுள் மறைந்திருக்கும் கவித்துவப் பிரதியை அடையாளம் காண உதவக் கூடியவை. சொல்லாடலின் அடித்தளம் ஒரு வாக்கியம் அல்லது அறிக்கையின் எல்லைகளை விட ஆழமான மொழியியல் அமைப்பைச் சார்ந்ததாகும்.    

ஒரு கவிதை அதனை வாசிப்பவருக்கு ஒரு கிளர்ச்சியை அல்லது தளர்ச்சியைத் தருவதாக உள்ளது. அதே வேளையில் அதன் சொல்லாடல் பற்றிய சில விளக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது ஒரு இயல்பை, ஆசையை, சார்பை அடையாளப்படுத்தி, ஒட்டுமொத்த ஆளுமையைப் புலப்படுத்தி விடுகிறது. எதற்காக இந்தக் குறிப்பிட்ட வடிவம் என ஒரு ஐயப்பாட்டையும் எழுப்புகிறது. அதன் வடிவம் வாழ்நிலைக் கூறுகளின் செயல்பாட்டு தளத்தை மேலும் ஆழமாக, நுட்பமாக விவரிக்கிறது. அதன் முந்தைய தளத்தை விட்டு விலகியும் செல்கிறது.    

கவிதையில் சொல்லாடல் என்பது விவரணையல்ல. மேலும் சொல்லாடல் என்பது வாக்கியத்தில் காணப்படாத ஒன்று. வாக்கியம் சொல்லாடலின் பிரதிநிதியாக இருக்கும். சொற்களின் பன்முக வெளிப்பாட்டுத் தன்மை ஒளிரும் ஒரு பிரதியில் உண்மைநிலை ஒளித்து வைக்கப்படுகிறது. மெய்யும் மாயையும் நிறமாற்றம் கொள்வதாகத் தோற்றம் பெறுகின்றன. ஆனால், சொல்லாடல் எதிரெதிர் நிலைகளுடன் திரைகளுக்கப்பால் உண்மைநிலை மீது மையம் கொள்கிறது. ஒரு புலப்படாத மாற்றத்தைப் பொறுத்து, இனம் காணத்தக்க நிதர்சனத்தை சொல்லாடல் ஒருங்கிணக்கிறது.

நாம் பலவிதமான மெய்மைகளுடன் வாழ்கிறோம். மெய்மைகளின் எதிர்நிலைகளுடனும் வாழ்கிறோம். சொல்லாடலும் அவ்வாறே மெய்நிலைகளுடனும் மெய்நிலையின் எதிர்நிலைகளுடனும் இருப்பதே சிறந்தது. அது சாத்தியப்பாடுகளைக் கண்டடைவதன் மூலம் அணுகுதலை எளிமையாக்கும்.

வாழ்நிலையின் பிரதித்துவ மெய்மைகளின் பரந்த எல்லைகளால் சொற்கள் பிரவகிக்கின்றன. அத்தகைய மெய்மைகளைப் பிரதிக்குள் கொண்டு வருவது மட்டுமே ஒரு கவிதையின் நோக்கமல்ல. வெளிப்புறக் கூறுகளின் தெளிவான பிரதித்துவ உருவாக்கம் உள்நோக்கங்களைக் கோடிட்டுக் காட்டுவதாகவும் இருக்க வேண்டும். எனவே அவை மெய்மைகளை ஒரு குறியீடாக மாற்றும் ஒரு சொல்லாடல் செயலாக பிரதியில் தோன்றுகின்றன.    

பாதலேரின் படைப்பு பாதலேர் எனும் ஒரு மனிதனின் தோல்வி எனவும், வான்கோ எனும் கலைஞனின் படைப்பு ஒரு பித்தநிலையின் வெளிப்பாடு எனவும் பார்த் கூறியிருப்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

கவிஞன் சூழலுடன் தன்னை நெறிப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட தீவிர சிந்தித்தல் போக்கும் ஒரு பிரதியின் சொல்லாடல் முறையைத் தீர்மானிக்கிறது. ஆகவே ஒவ்வொரு பிரதியும் குறிப்பீடுகளின் கூடுதல் பிரதித்துவ தளங்களினுள் ஒரு பாதைவெளியை உருவாக்கி, அவற்றின் ஒழுங்கைச் சிதறடிப்பதன் மூலம் உயிர்ப்புள்ள ஒழுங்கீனத்தை உருவாக்குகிறது. அதன் விளைவாக, அத்தளங்களின் அமைப்பு வடிவ மாற்றத்தைப் பெறுகிறது. ஒவ்வொரு விசயமும் பிரதியில் அங்கும் இங்குமாக சிதறி ஒரு புதிய வடிவத்தை அடைகிறது. கவிஞனின் நெறியாள்கையைச் சார்ந்து அந்த தளம் ஒரு அமைப்பைப் பெறுகிறது. அந்தச் செயல் மேலும் மெய்நிகர் தன்மையாக மாறி, மறுகட்டமைப்புச் செயல்பாட்டுக்கு உகந்த அடித்தளத்தை வழங்குகிறது.

எல்லைகளைக் கடந்த  ஒருங்கிணைத்தலின் முழுமையும் ஒரு சொல்லாடலின் செயலாக உள்ளது. மூலப்பொருளுக்கு எவ்விதச் சேதமும் விளைவிக்காமல் ஏற்கனவே உள்ள ஒரு சொற்பொருள் தேய்ந்து வேறொரு புதிய பொருள் தோன்றுகிறது. வடிவம் மற்றும் அடித்தளங்களுக்கிடையே ஒரு இணைப்பைத் தோற்றுவிக்கும் முழுமை, தனித்துவ இயல்புகளின் பிளவுகளையும் தொடர்ச்சியாக ஒரு பார்வைநிலைக்கு மாறிக் கொண்டிருப்பதையும் அனுமதிக்கிறது. இது பிரதியின் எல்லைகளைப் போலவே பிரதித்துவ அமைப்பின் எல்லைகளையும் மீறுகிறது.

சொல்லாடலின் எல்லை மீறுதல் வாசிப்பவரின் அனுபவத்தைச் சார்ந்த ஒன்றாகவும் தோற்றம் கொள்கிறது. அது மாயைநிலை நோக்கி வாசிப்பவரை வெகு உத்வேகமாக விரட்டுகிறது; நிதர்சனத்தின் தற்காலிக மாற்றீடை நோக்கி இழுக்கிறது; உருமாற்றப்பட்ட பிரதியின் உள்வாங்குதலை உறுதிப்படுத்துகிறது.    

சொல்லாடலில் முக்கியமான ஒரு பங்களிப்பைத் தருவது உணர்வுநிலை. அதன் செயல்பாடு, இயல்புகளை மறைத்து வைக்கும் செயலிலிருந்து சற்று வித்தியாசமானது. ஏனெனில அது விவரணைகளைத் தருவதில்லை. சுய தேடலில் ஒரு சமிக்ஞை செய்ய அதற்கு ஒரு மனப்பாங்கு தேவையாக உள்ளது. அது மெய்நிலையை வலிந்து ஏற்றுக் கொண்டு, அவதானித்தல்வயமான இருப்புநிலையைப் பெற்றுள்ளது. உணர்வுகளின் வெளிப்பாடு ஈர்ப்புமிக்கதாக உள்ளது. அது குறிகளின் கீழ் பிரதியை ஸ்திரப்படுத்துகிறது. இதை இயல்பான மனப்பாங்குகளை ஒதுக்குவதாகவோ அல்லது மீறுவதாகவோ புரிந்து கொள்ளக் கூடாது. மேலும் உணர்வுநிலை என்பது மெய்நிகர் அடித்தளங்களை வடிவமைப்பதாகவும் உள்ளது.    

சூழல் என்பது மற்றொரு சிக்கலான அம்சம். மொழியும் சூழலும் பிரிக்கமுடியாத மெய்மைகள். சூழல் என்பது உபயோகப்படுத்தப்பட்ட வடிவத்தைத் தாங்கும் இடம் சார்ந்த நிலைப்பாடுகளின் தன்மைகளை உள்ளடக்கியது. அது மொழி உபயோகத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்று.

பின்நவீனத்துவத்தைப் பொறுத்தவரை இது ஒரு புதிய சிக்கல். ஒதுக்கப்பட்டது கிடைக்காததற்கான மாற்றீடு. பின்நவீனத்துவக் கவிஞன் வாசித்தல் அமைப்பின் குறிப்பிட்ட அமைப்பை மட்டும் நிராகரிக்கவில்லை; வாசித்தல் நிகழ்வில் ஒழுங்கு குலையாத சிந்தித்தலை நிறுவ முனையும் மனப்பாங்கையும் நிராகரிக்கின்றார். மேலும், ஒவ்வொரு புதிய வாசித்தல் செயலிலும் வெற்றிகரமாகக் களமிறக்கப்பட்ட உத்திகளின் தொகுப்பில் நம்பிக்கை வைக்கவும் மறுக்கிறார். நிலையான அவதானிக்கப்பட்ட மெய்மைகள், உலகளாவிய உண்மைகளாக எளிதாகச் சுருக்கப்பட முடியாமல் இருப்பதால், தோல்வி என நிறுவப்பட்ட இவ்வாறான உத்திகள் மாயைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

விரிவான கருத்துருவாக்கத்திற்கு எதிராக பின்நவீனத்துவக் கவிதையின் முரண்பாட்டின் தர்க்கரீதியான விளைவு விரிவான இணைக் கருத்துருவாக்கத்தை மறுதலித்தல் ஆகும். எனவே பின்நவீனத்துவக் கவிதையை வாசிக்கும் ஒருவர் பல்வேறு நிலைகளில் அதன் முரண்பாடுமிக்க சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக, தனித்துவம், நேர்த்தி, அடையாளம், சுதந்திரம், அறநெறி, தர்க்கம் மற்றும் உள்ளுணர்வு போன்றவை. இவை நவீனத்துவப் பிரதிகளில் சிக்கலற்ற நிலைகளில் இருப்பவை. ஒரு கவிதை வெறுமனே தனித்துவமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டுமெனில், தர்க்கரீதியாகவும் சுதந்திரமானதாகவும் இருப்பதாக யூகிக்க முடிந்தால் போதும். பின்நவீனத்துவக் கவிஞன் இத்தகைய சுயச் சான்றாதார மெய்மைகளை மிக எளிதாக மறுத்து விடுகிறான். அவனுக்கு தனித்துவமாகவும், நேர்த்தியாகவும், தர்க்கரீதியானதாகவும், சுதந்திரமானதாகவும் இருப்பது ஒரு கவிதை அல்ல.   

லக்கான் மற்றும் சசூர் கூற்றுப்படி, மொழி (சொல்லாடல்) என்பது முதன்மையான உந்துசக்தி; அது அனைத்துவித மானுடச் செயல்பாடுகளின் மற்றும் சமூகக் கட்டமைப்பு மாற்றங்களின் பின்னணியில் செயல்படுகிறது. ஆனால், நவீனத்துவவாதிகள் சொல்லாடலை மேம்பாட்டுடனும் வளர்ச்சியுடனும் குறிப்பிடுகின்றனர். சொல்லாடலின் மற்றொரு முக்கியமான செயல் என்னவெனில், பின்நவீனத்துவக் கோட்பாடுகளால் விவாதிக்கப்பட்ட மெய்மையை உருவாக்கம் செய்து பாதுகாப்பதாகும்.

ஆதாரம்:
1.     Foucault on the best definition of discourse
2.     Lyotard, Postmodernism Explained
3.     Benjamin, Walter, ‘The Work of Art in the Age of Mechanical Reproduction’
4.     Poetry as Discourse - Antony Easthope
5.     Postmodern Poetry Meets Modernist Discourse - Jos Joosten & Thomas Vaessens
6.     The Significance of Fictionalizing - Wolfgang Iser
7.     The death of the author & Image, Music, Text – Roland Barths
      8.  Jacques Lacan and Ferdinand de Saussure on Language

Thursday, February 26, 2015

நீட்ஷே 3-4

தத்துவவாதிகளின் தப்பெண்ணங்கள் குறித்து...
நீட்ஷே
3
தத்துவவாதிகளின் விரல் ரேகைகளைப் போதுமான அளவு உற்று நோக்கிய பின் நான் எனக்குள் சொல்லிக் கொள்வதுண்டு: மாபெரும் பிரக்ஞைபூர்வமான சிந்தனைகளை உள்ளுணர்வுச் செயல்பாடுகளுக்குள் இன்னமும் உட்படுத்த வேண்டும். அவை தத்துவார்த்த சிந்தனைப் போக்கை நோக்கியும் செல்கின்றன. பாரம்பர்ய பண்புகள் குறித்தும் “உள்ளார்ந்ததுஎது என்பது குறித்தும் திரும்பக் கற்க வேண்டியுள்ளதைப் போல நாம் இங்கு திரும்பவும் கற்க வேண்டியுள்ளது. முழுமையான செயல்முறைகளிலும் மரபார்த்த போக்குகளிலும் பிறப்பின் செயல் ஆழ்ந்த பரிசீலனைக்குத் தகுதிப்பாடு அற்றதைப் போல, “பிரக்ஞைபூர்வமான இருத்தல்உள்ளுணர்வுத் தூண்டுதல்களாக உள்ள எதிர்நிலையில் எந்த முடிவான அர்த்தத்திலும் இல்லை. ஒரு தத்துவவாதியின் பெரும்பாலான பிரக்ஞைபூர்வ சிந்தனை ரகசியமாக வழி நடத்தப்படுகிறது. மேலும் அவர்களுடைய உள்ளுணர்வுகளால் சில வகை வழிமுறைகளில் செலுத்தப்படுகிறது.


அனைத்து தர்க்கங்களுக்குப் பின்னாலும் இயக்கத்தின் தலைமை நிலை போலத் தோற்றம் தரும் பின்புலத்திலும் கூட மதிப்பீடுகள் நிலை பெறுகின்றன. அல்லது மேலும் தெளிவாகச் சொல்வதென்றால், உடல் இயங்கியல் தேவைகள் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட வகையான பதப்படுத்தலுக்காக நிலை கொள்கின்றன. உதாரணமாக, நுட்பமற்ற நிலையை விட உறுதியானது என்பது மதிப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும். மேலும், “மெய்மையைவிட புறத்தோற்றம் மதிப்பில் தாழ்ந்ததாக இருக்க வேண்டும். சில கணிப்புகள் நமக்கான ஒழுங்குபடுத்தலின் முக்கியத்துவத்திற்கு பதிலாக மேம்போக்கான கணிப்புகளாக மட்டுமே, நம்மைப் போன்ற சில இருத்தல்களின் பாதுகாப்பிற்கு அவசியப்படுகிற ஒரு குறிப்பிட்ட வகை முட்டாள்தனமாக மட்டுமே இருக்கின்றன. அப்படியெனில், மனிதன் என்பவன் “பொருள்களின் அளவீடுமட்டும் அல்ல-

4
ஒரு தீர்ப்பின் பொய்மை நமக்கு ஒரு தீர்ப்பிற்கான மறுதலிப்பாக இருக்கத் தேவையில்லை. இவ்வகையில் நமது புதிய மொழி விசித்திரமாக ஒலிக்கிறது. கேள்வி என்னவெனில், வாழ்வின் மேம்பாடு, வாழ்வின் பாதுகாப்பு, இனவகைப் பாதுகாப்பு, குறிப்பாக இனவகை பண்படுத்தல் எதுவரை என்பதே. தவறான தீர்ப்புகள் (செயற்கையான தீர்ப்புகளும்) நமக்கு இன்றியமையாது உள்ளதாக உரிமை கோரும் அடிப்படையைச் சார்ந்துள்ளோம். தர்க்கத்தின் கட்டுக் கதையை ஏற்றுக் கொள்ளாமலும் நிபந்தனையற்றதும் சுய அடையாளத்தினுடையதுமான தெளிவாகக் கண்டடைந்த உலகத்திற்கு எதிரான உண்மையை அளவிடாமலும் எண்ணிக்கை அளவில் உலகத்தின் நிலையான பிழை இல்லாமலும் மனிதனால் வாழ முடியாது. அதாவது தவறான தீர்ப்புகளைக் கைவிடுதல் என்பது வாழ்வைக் கைவிடுதல் ஆகும். மேலும் வாழ்வை மறுதலித்தலும் ஆகும். வாழ்வின் நிலைப்பாடு போல, பொய்மையை அடையாளம் காண்பது நிச்சயமாக பழக்கப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு உணர்வுகளை ஆபத்தான வழிகளில் எதிர்த்து நிற்பதாகும். ஒரு தத்துவம் நல்லதுக்கும் தீயதுகளுக்கும் அப்பாலான அடையாளத்திற்காக மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.

Monday, February 23, 2015

ஒரு கோட்டோவியத்தை விழுங்குகிறது மின்னல்

எந்த அளவுள்ள புகைப்படம் எனக் கேட்கிறாய்
கருப்பு வெள்ளையா அல்லது வண்ணமா எனவும்
ஒரு கனவு நகரத்திற்குள் என்னை அழைத்துச் செல்கிறாய்
சற்று நேரம் அந்தப் பிரபஞ்ச சௌந்தர்யத்தில்
பறந்து திரிய அனுமதிக்கிறாய்
கலைந்த கேசத்தை நேர்த்தியாக வாரி
கலைத்த முகத்தில் ஒப்பனை செய்யச் சொல்கிறாய்
புகைப்படக் கருவி முன் அமர வைத்து
எனது உடையைச் சரி செய்து
முகத்தைப் பிடித்துச் சற்று சாய்வாகத் திருப்புகிறாய்
புகைப்படக் கருவியின் பின்புறம் சென்று
லென்ஸ் வளையத்தினடியில் இடது ஆட்காட்டி விரலை நீட்டி
எனது பார்வையை அதில் குவிக்கச் சொல்கிறாய்
மின்சார ஒளியை என்மீது பாய்ச்சுகிறாய்
புன்னகைக்கச் சொல்கிறாய்
ஒரு மின்னலை என்மீது செலுத்துகிறாய்
ஒரு அதிர்வை எனக்குள் விதைக்கிறாய்
ஒரு வயோதிக மரத்தில்
ஒரு வாலிப இலையைப் படைக்கிறாய்
படைப்பு ரகசியத்தை என்மீது திணிக்கிறாய்
என்னைச் சிதைக்கிறாய்

நீட்ஷே

தத்துவவாதிகளின் தப்பெண்ணங்கள் குறித்து...
நீட்ஷே
2
“எதிர் நிலைகளிலிருந்து எவ்வாறு ஆதார நிலை தோன்றுகிறது? உதாரணமாக தவறுகளிலிருந்து உண்மையா அல்லது வஞ்சகத்தின் மீதான சக்தியிலிருந்து மெய்மையின் மீதான சக்தியா அல்லது சுயநலத்திலிருந்து சுயநலமற்ற செயல்பாடா அல்லது காமத்திலிருந்து சந்நியாசியின் புனிதமும் தீட்சண்யமுமான பார்வையா? அவ்வாறான மூலாதாரங்கள் அசாத்தியமானவை. அவற்றைக் கனவு காண்பவன் ஒரு முட்டாள். உண்மையில் மோசமானவன். உயர் மதிப்பு கொண்ட பொருள்கள் மற்றொரு வினோதமான சிறப்பியல்பு கொண்ட மூலாதாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். அவை இந்த நிலையற்ற, வசியப்படுத்துகின்ற, வஞ்சகத்தன்மைமிக்க, அற்பமான உலகிலிருந்தும் காமமும் மாயையும் கொண்ட குழப்பத்திலிருந்தும் மூலத்தின் தடயத்தைப் பெற முடியாது. செயல்படுபொருளாக உள்ள மறைமுகக் கடவுளான “அதுவேயாகஉள்ள பரம்பொருளின் மடியில் தான் அவற்றிற்கான அடிப்படை இருக்க வேண்டும், வேறு எங்கும் அல்ல.

இந்த வகையில் தீர்மானிப்பது எல்லாக் காலத்திற்குமான ஆன்மிகவாதிகளின் குறிப்பிடத்தக்க முன்முடிவுகளையும் தவறான எண்ணங்களையும் கட்டமைக்கிறது. இவ்வகையான மதிப்பீடுகள் அவர்களுடைய அனைத்து தர்க்க ரீதியான போக்குகளின் பின்புலத்தில் கவிந்திருக்கிறது. இது “அறிவு குறித்து அவர்களைத் தொல்லைப்படுத்தும் “விசுவாசத்தைச்சார்ந்தது. மெய்மை என இறுதியாகப் புனிதப்படுத்தப்பட்டவிசுவாசத்தைச்சார்ந்தது. ஆன்மிகவாதிகளின் விசுவாசம் என்பது எதிர்நிலை மதிப்பீடுகளில் உள்ள அடிப்படை விசுவாசம் தான். இது அவர்களுக்குள் அதீத எச்சரிக்கை வாய்ந்ததாக நிகழவில்லை. அனைத்தும் சந்தேகப்படுவதற்குரியதேஎன்ற டெகார்டிசிய உறுதி எடுத்துக் கொண்டுள்ள பெரும்பாலோனோருக்கும் கூட, உறுதியாக, மிகத் தேவைப்படும் இடத்தில் ஒருவர் சந்தேகப்படுவது சரியானதே என்பது தோன்றுவதில்லை.

ஒருவர், எதிர்நிலைகள் என்பவை உண்மையில் உள்ளனவா என்று முதலில் சந்தேகப்பட வேண்டும். இரண்டாவதாக, ஆன்மிகவாதிகள் தங்கள் முத்திரையைப் பதிக்கின்ற இந்த பிரபல மதிப்பீடுகளும் எதிர்நிலை மதிப்புகளும் வெறும் மேம்போக்கான கணிப்புகள் மட்டுமல்ல, அவை தற்காலிகமான புறத் தோற்றங்கள் கூட. அவை உள்ளவாறே ஒரு ஓவியர் உபயோகப்படுத்தும் பிரதிபலிப்பைப் பெறுவதற்காக சில வேளை மூலை முடுக்குகளிலிருந்தும், கீழ்ப் புறத்திலிருந்தும், தவளைப் பாய்ச்சல் பார்வையிலிருந்தும் கசியும் புறத் தோற்றங்கள். மெய்மை, உண்மை, சுயநலமின்மை ஆகியன அனைத்து மதிப்புகளுக்கும் தகுதி உடையவையாகின்றன. வாழ்வுக்கான உயர் தன்மையுள்ள, உயர்ந்தபட்ச அடிப்படையான வாழ்க்கை மதிப்பு வஞ்சகத்திற்கு, சுயநலத்திற்கு, காமத்திற்கு காரண காரியமாக அமைவது இன்னமும் சாத்தியம். உயர் தன்மையுடன் தொப்புள் உறவுள்ள, முடிச்சிடப்பட்டுள்ள வஞ்சகத்துடனும் எதிர்நிலைகள் எனத் தோற்றம் கொள்பவற்றுடன் தொடர்புள்ள நல்லது மற்றும் போற்றுதலுக்குரியவற்றின் மதிப்புகளைக் கட்டமைப்பது கூடச் சாத்தியம், சாராம்சத்தில் அவற்றுடன் இணைந்ததாகக் கூட இருக்கலாம். இருக்கலாம் தான்!

ஆனால், இவ்வகையான ஆபத்தான “இருக்கலாம்”-களுடன் அக்கறை கொள்ளும் சக்தி யாரிடம் உள்ளது? அதற்காக தத்துவவாதிகளின் ஒரு புதிய இனங்களின் வருகைக்காக உண்மையில் காத்திருக்க வேண்டும். இதுவரை நாம் அறிந்தவர்களிடமிருந்து உரையாடலின் சுவை மற்றும் மனப்பாங்கு பெற்றதைப் போல, அதாவது ஒவ்வொரு அர்த்தத்திலும் ஆபத்தான “இருக்கலாம்”-களின் தத்துவவாதிகளின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டும்.


எல்லாத் தீவிரத்துடனும் புதிய தத்துவவாதிகள் தோன்றுவதை நான் காண்கிறேன்.

Saturday, February 21, 2015

நீட்ஷே

தத்துவவாதிகளின் தப்பெண்ணங்கள் குறித்து...
நீட்ஷே
 1.
மெய்மையின் மீதான சக்தி பல துணிகர செயல்களின் மீதான சக்தியாய் இன்னமும் நம்மைத் தூண்டுகிறது. அதன் புகழ் வாய்ந்த நேர்மையை இதுவரை அனைத்து தத்துவவாதிகளும் மரியாதையுடன் பேசி வந்துள்ளார்கள். நம்முன் கிடத்தப்பட்டுள்ள இந்த மெய்மையின் மீதான சக்தி என்ன விதமான கேள்விகளை எழுப்புகிறது? விசித்திரமான, வஞ்சகமான கேள்விக்கு உட்படுத்த வேண்டிய கேள்விகள்! இன்னமும் அது ஒரு அரிதான தொடக்கமாய்த் தோன்றுகிறது. இப்போது கூட அது ஒரு நீண்ட கதை. இறுதியாக ஐயத்திற்கு இடம் அளிப்பது, பொறுமை இழப்பது மற்றும் பதற்றத்துடன் திரும்புதல் என்பது நமக்கு வியப்பானதா? கேள்விகளைக் கேட்பதற்கு கூட இந்த ஸ்பிங்ஸிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருப்பது வியப்பானதா? உண்மையில் இங்கு நம்முன் கேள்விகளைத் தொடுப்பது யார்? உண்மையில் நம்முள் “மெய்மையையாசிப்பது எது?

உண்மையில் இந்த சக்தியின் ஆதாரம் குறித்து கேள்விகளின் நெடுங்காலத் தேக்கத்தை அடைந்துள்ளோம் – அதீதமான அடிப்படைக் கேள்வி முன் இறுதியாக ஒரு முழுமையான நிறுத்தத்தை அடையும் வரை இந்த சக்தியின் மதிப்பு குறித்து நாம் வினவுகிறோம். நாம் மெய்மையை யாசிக்கிறோம் எனக் கொள்வோம். மெய்மை அற்றதை, மேலும் நிச்சயமற்றதை, அறியாமையை ஏன் நாம் நாடுவதில்லை?

மெய்மையின் மதிப்பு குறித்த சிக்கல் நம்முன் தோன்றுகிறது அல்லது அந்த சிக்கல் முன் நாம் தோன்றுகிறோம். நம்மில் யார் இங்கு பதில் அளிக்கும் ஈடிபஸ்? யார் கேள்வி எழுப்பும் ஸ்பிங்ஸ்? அது கேள்விகளின் அல்லது ஐயக் கேள்விகளின் சந்திப்பு என்று தோன்றுகிறது.

அது அரிதாக நம்பத் தகுந்ததாகத் தோன்றினாலும், இறுதியாக பெரும்பாலும் இதுவரை நம்முன் வைக்கப்படாத சிக்கல் போல, முதலில் நாம் சந்தித்தது போல, நமது கண்களுக்குள் பொருத்தப்பட்டது போல, ஒரு இடையூறு போல நம்முன் தோன்றுகிறது. அதில் ஈடுபடத் துணிந்தால் மேன்மையானது எதுவும் இருக்காது.

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...