Thursday, April 25, 2013

நட்சத்திரங்களோடு வாழ்பவன் 

மோகன ரவிச்சந்திரன்

காய்ந்த மரக்கிளைகள் எனப் பிரியும் தண்டவாளங்களின் அருகே
நடக்கிறேன்
சரியான இடத்தைத் தேர்வு செய்ய.
ரயிலின் ஓசை கேட்டவுடன்
கழுத்தைத் தண்டவாளத்தின் மீது பொருத்த வேண்டும்
சக்கரங்களில் மிதிபட ஏதுவாக
தப்பித்துச் செல்ல அவகாசம் தராமல்.
கருமையான் வானம் நட்சத்திரங்களின்றி
நடந்து வருகிறது கூடவே.
பறவைகள் அனைத்தும் ஏற்கனவே
தத்தம் கூடு சேர்ந்திருக்க வேண்டும்.
ஓரிரு மனித உருவங்கள் வெகு தொலைவில்
நிழலாய்த் தெரிகின்றன.
ரயில் வரும் நேரத்தை உத்தேசமாய்க் கணித்திருந்தேன்.
ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தில்
தண்டவாளத்தின் முன்பாக மண்டியிட்டு அமர்கிறேன்.
எனது உறவின் இழையில் இதுவரை பிணைந்தவர்களின் முகங்களை
ஒவ்வொன்றாகத் திரையில் ஓட விடுகிறேன்.
நேரம் அதிகமில்லை என்பதால்
கலவரத் திரையில் முகங்கள் வேகமாக ஓடுகின்றன
அடையாளம் தெரியாதபடி.
துணிந்து நினைவுகளைத் துரத்தி விட்டு
மல்லாந்து படுத்து கழுத்தைத் தண்டவாளத்தின் மீது பொருத்துகிறேன்.
கண்களைச் சற்று அகலமாகத் திறக்க
வானம் தெரிகிறது.
வானத்தில் இரண்டு நட்சத்திரங்கள் கண் சிமிட்டுகின்றன.
எழுந்து வீடு திரும்புகிறேன்.


No comments:

Post a Comment

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...