Saturday, May 11, 2013

வாக்குமூலக் கவிதைகள் 

கோவை இலக்கியச் சந்திப்பில் கவிஞர் சுகிர்தராணியின் உரையில் சிலாகிக்கப்பட்ட Apologetic Literature என்பது ஏற்கெனவே வளர்த்தெடுக்கப்பட்ட Confessional Poetry -யின் சாரம்சத்தைப்  பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது. அமெரிக்கக் கவியான ராபர்ட் லோவலின் படைப்புக்களில் இத்தகைய கவித்துவக் குரலைக் கேட்க முடியும். அதன் பின்னர் சில்வியா பிளாத்தின் கவிதைகளில் லோவலைப் போலல்லாமல் நிதர்சனமான சுய களிப்பைத் தூண்டுவதை விட, ஒரு சுய வரலாற்று வலி மற்றும் துயர உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதமாக இத்தகைய குரல் ஊடாடுவதைக் கேட்க முடியும்.

Confessional Poetry என்ற சொல்லை ரோசந்தால் முதன் முதலாக லோவலை மனதில் வைத்தே பயன்படுத்தினார். அப்போது லோவலின் கவிதைகள் பாலியல் குற்ற உணர்வு, போதைக்கு அடிமையாதல், மனநல விடுதிகளில் தென்படும் தனிமை உணர்வு போன்றவற்றின் பக்கம் திரும்பியிருந்தது. சில்வியா பிளாத்தையும் ஒரு ஒப்புதல் வாக்குமூலக் கவியாகவே காணும் ரோசந்தால், அதற்குக் காரணமாகச் சொல்வது பிளாத்தின் உளவியல் காயமும் அவமதிப்பும் அவருடைய நாகரிகத்தைத் தோலுரித்துக் காட்டும் விதமாக ஒரு கவித்துவக் குரலைத் தமது கவிதைகளின் மையத்தில் நிறுவியதுதான். ஆனால் தெட் ஹ்யுஸ் இதை மறுத்தார். சுய வரலாற்று விவரங்களை லோவலை விடவும் அதி நுட்பமாக ஒரு அடையாளமூட்டும் வழியில் தமது கவிதைகளில் பிளாத் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் லோவலின் படைப்புக்களில் உள்ள யதார்த்த நிலைப்பாடு பிளாத்தின் கவிதைகளில் விடுபட்டுள்ளது என்னும் கருத்தும் நிலவுகிறது.

ஆனால் நாம் மறு அவதானிப்பு செய்ய விரும்புவது கவிதைகளில் ஊடாடும் கவித்துவக் குரலின் இயல்பு எவ்வளவு தூரம் ஒரு கவிதையை வாக்குமூலக் கவிதையாக மாற்றுகிறது என்பதைத்தான்.

லோவலின் கவிதைகளிலிருந்து பிளாத்தின் கவிதைகளை வேறுபடுத்திக் காட்டுவது கவிதைக்குள் செயல்படும் ஒரு குரல் தான் என்பதில் ஐயமில்லை. லோவலிடம் இருப்பது இலக்கியச் சுயம். அது ஒரு சுய எதிர்ப்புக் குரலாக, பணிவுள்ள குரலாக, வேடிக்கைமிக்க குரலாக அதீத உணர்வுடன் கட்டமைக்கப்படுகிறது. இந்தத் தருணங்களில் தமது குறைபாட்டை, தமது மடத்தனத்தை, தமது பெருந்துயரை, மற்றவர்கள் மீதான தமது வலியின் கசப்பான அனுபவத்தை லோவல் வெளிப்படுத்தும் போது உண்மையில் அவர் தகவல்களை வெளிப்படுத்துகிறார். அவை அவருக்கு தாழ்மை உணர்ச்சி மிக்கவையாகவோ அல்லது தப்பெண்ணம் கொண்டவையாகவோ இருக்கின்றன. இந்தத் தொனியில் லோவலை அணுகினால், அவர் கவிதைகளில் செயல்படும் குரல் ஒரு வாக்குமூலச் செயல்பாடாக ஒலிப்பதை உணரலாம். வாசிப்பவனாக மன்னிக்கும் அதிகாரம் நமக்கு இல்லை என்றாலும் கூட, லோவலின் தன் மீதே குற்றம் சுமத்தும் பாங்கு தீர்ப்பு சொல்வதை அசாத்தியமாக்குகிறது.

சில்வியா பிளாத்தின் கவிதைகள் வேறு கோணத்தில் அமைந்தவை. பிளாத்தின் கவிதையில் இயங்கும் குரல் சிலரைத் தாயாகவோ அல்லது தந்தையாகவோ அழைக்கிறது. குறிப்பிட்ட தன்மை மீது போதாமை கொண்ட குரலாகத் தொனிக்கிறது. அது பொதுமைப்படுத்தப்பட்ட குரல், நிதர்சனமானதல்ல அதன் எல்லைகளை வெளிப்படுத்த நாடகப் பாங்கான திறமையைக் கைவசம் கொண்டுள்ள வகையைச் சார்ந்தது. பிளாத் வெளிப்படுத்தும் தகவல்கள் போதுமான அளவு தப்பெண்ண உணர்வுகளை ஊட்டுகின்றன. பிளாத் வசிப்பவன் ஒரு புண்படுத்தும் உணர்வை அனுபவிக்கவே ஆசை கொள்கிறார். ஒரு மென்மையான உணர்வு இல்லாததாகவே கவித்துவக் குரலை வெளிப்படுத்துகிறார். மென்மைத் தன்மை என்பது கவிதையில் இயங்கும் குரலைத் தீர்மானிக்கும் நேர்த்தியான அளவுகோல் அல்ல. எனினும் ஒரு குறிப்பிட்ட போக்கில் தப்பெண்ணம் கொண்ட உணர்வை அது வெளிப்படுத்துகிறது. பிளாத்தின் கவிதையில் வெளிப்படும் அவமதிக்கப்பட்ட குரல் தமது துயரத்திற்கு ஒப்புதல் வாக்குமூலம் தரவில்லை. இந்த மனப்பாங்கு லோவலின் குரலைப் போலல்லாமல் எளிதில் பாதிப்பை உருவாக்ககூடியதாக உள்ளது. இக்கவிதைகளின் செயல் திறனை உற்றுப் பார்த்தால், கவிதையில் ஊடாடும் குரலையும் அந்தக் குரலுக்கும் கவிஞனுக்கும் இடையே உள்ள உறவையும் மிகச் சரியாகக் கணிக்க முடியும்.

இனி பின்நவீனத்துவக் கூறுகளைச் சற்று பார்க்கலாம்.

1. உயர்வு, தாழ்வுகளுக்கு இடையே உள்ள எல்லைகளை ஒதுக்குவது.
2. கடுமையான வகை மதிப்புகளை ஒதுக்குவது.
3. அலங்கார உடுத்தல்களை வற்புறுத்துவது.
4. நையாண்டி போலிகள்.
5. எதிர்ச் சொற்றொடர்.
6. விளையாட்டுத்தனம்.

பின்நவீனத்துவக் கலையும் கோட்பாடும் அனிச்சைச் செயல், சுய பிரக்ஞை, சிதிலம், தொடர்ச்சியின்மை, ஐயப்பாடு, உடனிகழ்வு, மேலும் கட்டவிழ்க்கப்பட்ட , மையம் அழிக்கப்பட்ட, இரக்க இயல்பற்ற உட்பொருளை வலியுறுத்துவது போன்றவற்றிற்குச்  சாதகமானவை.  பின்நவீனத்துவம் சிதிலம் பற்றிய, தற்காலிகம் பற்றிய அல்லது ஒவ்வாமை பற்றிய கருத்து பற்றி புலம்புவதில்லை. மாறாக, அவற்றைக் கொண்டாடுகிறது. இந்த உலகம் அர்த்தம் அற்றதா? கலை அர்த்தத்தை உருவாக்கும் என பாசாங்கு செய்ய வேண்டியதில்லை, வெறுமனே இந்த அர்த்தமின்மைகளோடு விளையாடுவோம் எனச் சொல்லிச் செல்கிறது கோட்பாடு.

இந்தப் புரிதல்களோடு பின்நவீனத்துவ தளத்தில் வாக்குமூலக் கவிதைகளும் இயங்குவதை ஒப்பிட்டு உணர முடியும். எனவே, பின்நவீனத்துவக் கூறுகள் காலம் கடந்து முன்னும் பின்னும் அனைத்துப் படைப்புக்களிலும் பரவிக் கிடக்கின்றன என்னும் முடிவுக்கு வரும் அதே நேரத்தில் வாக்குமூலக் கவிதைகளும் அனைத்துக் கால கட்டங்களிலும் படைக்கப்பட்டு வந்துள்ளன என்னும் முடிவுக்கும் வரலாம்.

தமிழில் இது போன்ற அணுகுமுறை மேலும் செறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சுகிர்தராணியின் இலக்கியச் சந்திப்பு உரை அமையப் பெற்றது மெச்சத் தகுந்தது.

மோகன ரவிச்சந்திரன்
(யுராப் மற்றும் மேரி க்லாஜஸ் ஆகியோரின் கட்டுரைகளைத் தொகுத்து எழுதப்பட்டதாகும்.)

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...